Saturday, March 11, 2017

திருமந்திரத்தில் ஒரு மந்திரம் (3)



மாயையால் பின்னப்பட்ட இந்த உலகில்,  மாயையை உண்மை என மனம் நம்பி அதன் பின்னே செல்கின்றது.  நிலையற்ற பலவற்றை உண்மை என்று எண்ணி அதைப் பாதுகாக்கவும் பேணிப்போற்றவும் நினைக்கின்றது. "நான், எனது, தனது" என்ற உரிமைப்போராட்டத்தில் தன் மதியை இழந்து தவிக்கின்றது.

"கயிற்றைப் பார்த்து பாம்பாக நினைத்து" பயத்தில் வாழ்கின்றதுபயம் வரும்பொழுது மட்டும் இறைவனை நாடித் துணை கேட்கின்றது.. எல்லாநேரத்திலும் எந்தவிதச்சூழ்நிலையிலும் இறைவன் தன்னோடு இருக்கின்றான் என்று நம்ப மறுக்கும் நெஞ்சம் "இறைவா. இப்பொழுது மட்டுமாவது என்னோடு கூட வா" என்று  கேட்கின்றது.

இறைவன் நம்மை விட்டு எப்பொழுதாவது பிரிகின்றனா? இல்லை, நாம் தான்  இறைவனைத் தனிப்படுத்தி பிரிந்து நிற்கின்றோம்.

இறைவனோடு நம்முடைய தொடர்பினை அழகாக வர்ணிக்கும் திருமூலர் இவ்வாறு சொல்கின்றார்.

இணங்கி நின்றான் எங்குமாகி நின்றான்
பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும்
உணங்கி நின்றான் அமராபதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணையாமே!

நாம் அவனை அழைக்காமலே தான் படைத்த உயிரினங்களைக் காக்க இசைந்து வருபவன் இறைவன்.

"எங்குமாகி நின்றான்" என்ற வார்த்தைகள் உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு அணுவிலும் அவன் பிரதிபலிப்பைக் காட்டுகின்றது.

அவன் நம் கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கும் நம்முடைய மனத்தின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து நமக்கு முன்னே வந்து நிற்பவன்  !!

" வணங்கி நின்றார்க்கு வழித்துணையாமே" என்று உறுதிப்பட திருமூலர் சொல்லும்போழுதில் இறைவன் நம் வாழ்வில் நமக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமின்றி, ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பதை நம்மால் உணரமுடிகின்றது.

அப்படியானால், வணங்காதவர்க்கு அவன் வழித்துணையாயில்லையா என்ற கேள்வி நம் மனதில் தோன்ற வாய்ப்புண்டு. இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் திருமூலர் இன்னொரு பாடலில் பதிலளிக்கிறார்.

"எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே"

எனக்கு இறைவன் அன்பு காட்டுவதில்லை என்று ஒதுங்கி நின்றார்களும் பிழைக்க வேண்டும் என்று வேண்டும்போதெல்லாம் அவன் அவர்களுக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி நண்பனாகவும் உறுதுணையாகவும் இருக்கின்றான்.

மேலை நாட்டு அறிஞர் ஒருவர் இறைவனின் பேராண்மையை விளக்கும் வகையில் சொன்னார்  “God is like a circle with centre everywhere and circumference nowhere”

திருமந்திரத்தின் ஒவ்வொரு சொல்லும் நமக்கு ஒரு மந்திரமாக அமைந்துள்ளது !!
                                                                      


No comments:

Post a Comment