Saturday, August 1, 2015

ஒரு இதயம் துடிக்கிறது..(A heart beats....) short story in Tamil by G.,Balasubramanian

ஒரு இதயம் துடிக்கிறது..

சிறுகதை  .பாலசுப்ரமணியன்

சுப்ரமணிய கௌண்டர் என்றாலே கோவை வட்டாரத்தில் தெரியாதவர்களே கிடையாது. அந்த ஊரில் அவர் ஒரு பெரிய புள்ளி. அவருடைய கண்காணிப்பில்  கிட்டத்தட்ட ஏழெட்டு தொழிற்ச்சாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பல கோடி சொத்துக்களுக்கு அவர் முதலாளி . வீட்டில் எப்போதும் ஐந்து அல்லது ஆறு கார்கள் தயாராக இருக்கும்ஆனால் அந்த ஆடி காரைமட்டும் அவரைத் தவிர வேறு யாரும் உபயோகிப்பதில்லை.
அவரிடம் ஏழெட்டு டிரைவர்கள் வேலை பார்த்தாலும் அந்த ஆடி காரை அவர் மட்டும் தான் ஓட்டுவார். டிரைவர்களிடம் அவர் கொடுப்பதில்லை. அவர் ஓட்டுவதைப் பார்க்கும் போது டிரைவர்களுக்கே கொஞ்சம் பயமாக இருக்கும். அவ்வளவு வேகமாக ஓட்டுவார்.

நேற்று காலை அவர் கோவையிலிருந்து சேலம் சென்றபோது  சேலம் நகருக்கு முன்னால்  ஒரு சிக்னல்,  சிவப்பு வண்ணம் மாறுவதற்காக அவர் வண்டியில் காத்த்திருந்தார் .

"சார், சார்,,, பசிக்கு ஏதாவது போடுங்க சார்.." அந்தப் பிச்சைக்காரி வண்டியின் ஜன்னல்களைத் தட்டி பிச்சை கேட்டுக்கொண்திருந்தாள் .

"போ.. போ.. கதவைத் தட்டாதே." கை அசைவின் மூலம் அவளுக்கு சைகை காட்டிவிட்டு வண்டியை  நகர்த்தினார்.

"சார், சார், ஏதாவது பிச்சை போடுங்க சார்.. சாப்பிட்டு இரண்டு நாளாச்சு சார்.."

"பொய் சொல்லறதே .....உங்களுக்கு  பொய் சொல்லறதே வழக்கமாகப் போச்சு "
சிவப்பு வண்ணம் விலகி பச்சை வண்ணம் கண்டதும் வண்டியை முன்னே நகர்த்தினார்.
" தானம் தர்மம் பண்ணறத்துக்கு ஜனங்களுக்கு மனசே வர மாட்டேங்கறது."  அந்தப் பிச்சைக்காரி மேலே நகர்ந்தாள்

மாலையில் சேலத்தில் தன் வேலைகளை முடித்துக்கொண்ட சுப்ரமணிய கௌண்டர்  திரும்புவதற்கு முன்னால்  சூடாக ஒரு கும்பகோணம் டிகிரி காப்பியை சாப்பிட்டு விட்டு தன வண்டியைக் கிளப்பினார். தன்னுடைய வேலை வெற்றிகரமாக முடிந்த சந்தோசம் அவர் மனதில் நிரம்பியிருத்தது. அதன் பிரதிபல்லிப்பு அவர் வண்டியின் வேகத்தில் நன்றாகத் தெரிந்தது.

சேலத்திற்கு வெளியே நேஷனல் ஹை வேயில் அவர் வண்டி நூறு கிலோ மீட்டேர்களைத்  தாண்டி பறந்து கொண்டிருந்தது

திடீரென்று அவர்க்கு ஓர் ஷாக். . அந்த மங்கிய இருட்டில் ஒரு  உருவம் அந்த ஹை வேயை வேகமாகக் கடந்தது. அவர் கால் அசுர வேகத்தில் பிரேக்கை அழுத்தியது. "கிரீச்என்ற சத்தத்துடன் அந்த கார் நிற்கும் முன்.. " மை காட். " என்று அவர் அலற, காரில் அடிபாட்ட அந்த உருவம் வானில் பத்தடி உயரத்தில் பறக்க...

காரை ஓரமாக நிறுத்திய கௌண்டர் அந்த உருவம் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட கிழே கிடப்பதைப் பார்த்தார்.

சுற்றும் முற்றும் பார்த்தவர்  "நல்லவேளை. கும்மிருட்டு.. இங்கே யாரும் இல்லை. நம்ம வண்டியையும் யாரும் பார்கவில்லை.. பார்த்தால் என்ன ஆகும்? அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

பைத்தியம் பிடித்தவர் போல வண்டியை நோக்கி ஓடியவர் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக மேலே சென்றார். உடலெல்லாம்  வியர்த்தது. . அந்த வண்டி கோவை வரை எங்கேயும் நிற்கவில்லை.

வீடு திரும்பியதும் காரேஜில் காரை நிறுத்திவிட்டு அதை சுற்றிவந்து ஏதாவது  தடயங்கள் வண்டியில் தென்படுகிறதா என தேடிப்பார்த்தார். தடயங்கள் ஒன்றும் தென்படாததால் சிறிது  அமைதியுடன் வீட்டின் உள்ளே நுழைந்தார்

"என்னங்கடென்ஷன் போல..உடம்பெல்லாம் வியர்த்து .. போன காரியம் எதாவது சரியா முடியல்லையா?" அவர் மனைவியின் கேள்விகளுக்கு அரைகுறை பதில் சொல்லிவிட்டு, " கொஞ்சம் தலைவலி.. நான் படுத்துக்கப்போறேன்.. தொந்தரவு செய்யாதீங்க. " 

காலை நாலு மணி........  நெஞ்சில் ஏதோ ஒரு பாறையை தூக்கி வைத்தால் போல் ஓர் வலி............. உடல் .வியர்த்துக்கொட்டியது.............. நா வறண்டது ..  அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை நோக்கிக் கை சென்றது. ஆனால் அதை பிடிக்க முடியவில்லை.

" சாவித்திரி.. ..சாவித்திரி." அவர் குரல் .கொடுத்தார்.
 பயந்து கொண்டே எழுந்த சாவித்திரி.. "என்னங்க.., என்ன ஆச்சு?"
"
 நெஞ்சு வலிக்கிதும்மா..."

"அய்யய்யோ, இருங்க டாக்டரைக் கூப்பிடறேன்..."

"இல்லே, ஷ்யாமைக் கொஞ்சம் எழுப்பி என்னை ஆஸ்பத்தரிக்கு அழைத்துக் கொண்டு போகச்சொல்லு."

ஆஸ்பத்திரியில் அவருக்கு  உடனே . சீ .யு வில் அட்மிஷன் ......... ஊரில் உள்ள பெரிய இதய அறுவை  சிகிச்சை நிபுணர்கள் அங்கே  கூடினர்

சில மணி நேரம் அவரை பரிசோதித்தபின்  டாக்டர்,  ஷ்யாமையும் கௌண்டரின் மனைவியையும் தனியாக அழைத்துப்  பேசினார்.

"ஷ்யாம்.. உங்க அப்பாவுக்கு டோடல் ஹார்ட் பைலியர். இதயத்தின் ரெண்டு வால்வுகள் வேலை  பார்க்கவில்லை. ஹார்ட் தசைகள் சுருங்கி விரியமுடியாத நிலையில் உள்ளன.. அவர் உயிர் பிழைக்க ஒரே வழி.. இதய மாற்று சிகிச்சை.. அதற்கு உடனே ஒரு இதயம் கிடைக்கணும்.. அது மிகவும் கடினமானது. அதுவரைக்கும் ரிஸ்க்தான். "

சாவித்ரியின் கண்களில் நீர் வழிந்தது.. "அந்த மருதமலை முருகன் தான் வழிவிடணும்."

"நான் முயற்சி செய்கிறேன்... எங்காவது இதயம் கிடைக்குமாவென்று. பொதுவாக இதய மாற்று சிகிச்சைகளை  இதயம் கிடைத்து ஓரிரு மணி நேரங்களுக்குள்  செய்ய வேண்டும்."

இரண்டு  மணிநேரத்திற்குப்  பிறகு ஷ்யாமை டாக்டர் அவசரமாக  அழைத்தார்." ஷ்யாம். ஒரு குட் நியூஸ்சேலத்திலே ஒரு பெண் விபத்திலே மாட்டிக்கொண்டு அவளுக்கு மூளைச்சாவு எற்பட்டுதால் அவள் இதயத்தை தானமாகத் தர அவர் உறவினர்கள் ஒத்துக்கொண்டுள்ளனார். உங்களுக்கு   ஓகே என்றால் அதை இங்கே கோவைக்கும எடுத்து வர ஏற்பாடு பண்ணலாம். அவரைக் காப்பாற்ற அது ஒன்றுதான் இப்போதைக்கு வழி. “

"டாக்டர்.. அது முடியுமா..?"

இப்போதைக்கு ரிஸ்க் 90 விழுக்காடு... ஒரு வேளை இதய மாற்று சிகிச்சை பண்ணினால் சில ஆண்டுகள் வாழ வாய்ப்புண்டு.."

தங்கள் குடும்பத்தினரைக் கூடி ஆலோசித்தபின் ஷ்யாம் இதய மற்று சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டான். "

டாக்டர் பேஷண்டை அறுவை சிகிச்சைக்குத் தயார் பண்ணுங்க.." பெரிய டாக்டர் தன் இளையவருக்கு ஆணையிட்டார். போர் வேகத்தில் வேலைகள் நடந்தன.

சேலத்திலிருந்து ஆம்புலன்சில் இதயம் கோவைக்கு வந்து அங்கு மாற்று சிகிச்சை நல்லபடியாக நடந்தது..

 சாவித்திரியின் வேண்டுகோளை அந்த  மருத மலையான் கேட்டுவிட்டான்.!
ஓரிரு வாரங்களுக்குப் பிறகு டாக்டர் இதயத்தை தானமாகக் கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்ல அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்தார்.

நாற்பது வயதுடைய ஓர் நபரும் அவருடைய  மகனும்  வந்திருந்தனர்.
சுப்ரமணிய கௌண்டர் டாக்டரிடம் அவர்களுக்கு ஏதாவது பணம் அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
டாக்டர் வந்தவரிடம் " சார். உங்களுக்கு ஏதாவது பண உதவி செய்யணும் என்கிறார்" என்றார்..

கைகூப்பி நின்ற அந்த நபர்  "அய்யா, நாங்க பிச்சை எடுத்து .பிழைக்கிறவங்க. இந்த பொம்பிளை அங்கே சிக்னலிலே தினசரி பிச்சை எடுக்கும். பிச்சையெடுத்தாவது  இந்தப்பையனை நல்லாப் படிக்க வைக்கணும்னு சொல்லிச்சுங்க.. அன்னிக்கு ராத்திரி பக்கத்துக்  கடையிலே கொஞ்சம் அரிசி வாங்கப் .போச்சுஏதோ புறம்போக்கு காரிலே போற மமதையிலே அடிச்சுப் போட்டுட்டுப் போயிட்டான்.  மூளையிலே அடிபட்டது ....உசிரு போச்சு. இந்த ஜென்மம் அடிக்கடி .சொல்லுங்க. “ஆண்டவன் நம்மை பிச்சை எடுக்கச்சிட்டான் .. என்னிக்காவது நம்மளும் நாலு பேருக்கு ரெண்டு காசு தர்மம் பண்ணனும்னு. . அதுதான்  முடியலே.. போற போக்கிலே அதோட உடம்பாவது நாலு பேருக்கு உபயோகமா .இருக்கட்டுங்க...  இதுக்குப்போயி போயி காசு வாங்கினா அந்த ஜென்மம் என்ன மன்னிக்காதுங்க.."
டாக்டரின் கண்களில் நீர் வழிந்தது.

சுப்ரமணிய கௌண்டரின் இதயம் துடித்ததுஅவர் அந்த பிச்சைக்காரன் முன் கையேந்தி நிற்பது போல் மனத்தில் ஒரு நினைப்பு..

அந்தச் சிறுவனிடம் டாக்டர் கேட்டார்  "தம்பி.. உன் பெயர் என்னப்பா?"

"அம்மா. ஆசையா என்னை கர்ணன்னு கூப்பிடுவனாக சார்..:"

:என்ன படிக்கறே?"

"ஆறாம் கிளாஸ் "

:கையிலே என்ன புத்தகம?"

“ திருக்குறள் சார்......”

"திருக்குறள்  தெரியுமா?"

"நிறைய குரள் தெரியும் சார்.."

:உனக்குப் பிடித்த குரள் ஒண்ணு சொல்லு "

"இன்னா செய்தாரை ஒறுத்தல்
 அவர் நாண  நன்னயம் செய்துவிடல்."


ஒரு பிச்சைக்காரியின் இதயம் பணக்கார உடலில் உட்கார்ந்து துடித்துக்கொண்டிருந்ததா இல்லை சிரித்துக்கொண்டிருந்ததா  .. யாருக்குத் தெரியும் - சுப்ரமணிய கௌண்டரைத்தவிர?

No comments:

Post a Comment