நான்
கண்ட கண்ணன்
காரிருளில் பிறந்த ஒளியொன்று
கண்ணன் என்ற பெயர் கொண்டது!
எட்டாத அறிவுக்கும்
எட்டிவிடும் அறிவாக
எட்டாம் குழந்தையாய்
எழில்வடிவம் வந்தது !
கார்மேகம் மின்னலிடக்
காற்றிடையில் இடியொலிக்கக்
கருநாகம் குடைபிடிக்கக்
காற்றாட்டைக் கடந்தது !
காசினியைக் கையடக்கக்
கம்சனவன் துடிதுடிக்கக்
கார்வண்ணன் கால்மிதிக்கக்
கனவங்கே கலைந்தது !
மண்ணுண்ட மாதவனின்
வாய்கண்ட தாயவளும்
நோய்கண்ட மருந்தாக
வான்கண்டு வியந்தாளே !
கால்நடை பயின்றவுடன்
காளிங்கன் மேலேறி
நர்த்தனங்கள் பயின்றிடவே
நாரணனும் சென்றானோ?
கோவர்தனமும் தவமிருக்க
கோவிந்தனுக்குக் குடைபிடிக்க
கோபங்கள் பயனின்றிக்
குனிந்தானோ இந்திரனும்?
கோமகனின் குழலுக்குக்
கோவினமும் பால்சுரக்கும்
கோதையர் மெய்மறக்கும்
கோலாட்டம் உளமினிக்கும் !
தருமனின் அறம் காத்தான்
திரௌபதியின் மானம் காத்தான்
தனஞ்சயனின் வீரம் காத்தான்
தரணியின் தர்மம் காத்தான் !
அவனிக்கு மறை தந்தான்
அவலுக்குப் பொருள் தந்தான் !
அறிவுக்குக் கீதை தந்தான்
அன்புக்குத் தன்னைத் தந்தான் !
துளசிக்குத் தலைவணங்கும் எளிமை
துயரத்தில் தோள்கொடுக்கும் வன்மை
தூங்காத நித்திரையில் அவன் பெருமை
தூய
மனத்தில் வாழ்கின்ற மேன்மை !
காரிருளில் பிறந்த ஒளியொன்று
கண்ணன் என்ற பெயர் கொண்டது !!
No comments:
Post a Comment