Saturday, July 9, 2016

குற்றாலச் சாரலிலே …… ( The season of Coutrallam .. a poem in Tamil)

குற்றாலச் சாரலிலே ……

பொதிகையிருந்து பூத்துவரும் புதுப்புனலே 
பொழிந்துவிடும் பொலிவுடனே குற்றாலத்தில் ..
பொங்குதமிழில்  புன்சிரிக்கும் கவிதையென
புதுமணமே முகர்ந்துவிடும் மலைச்சாரல் !

எதுகையின்றி மோனையின்றி தாளமின்றி
இசைபாடும் இலையசைத்து மரங்கள் !
கலையரசி யாழிசையைக் கவர்ந்துவந்து
காதருகே கவிபாடும் கருவண்டுகளே !

மங்குஸ்தான் பழம்பறித்து மகிழ்ந்திருக்கும்
மந்தியெல்லாம்  மலையோர மரங்களிலே !
மலைச்சாரல் நீர்நனைந்து மலர்களெல்லாம்
மண்வீழ்ந்து மாலைதன்னை கோர்க்கும் !

வானமுதம் வழிந்ததுபோல் வளைந்துவரும்
வாசமுடை மூலிகையுடன் தேனருவி !
வான்தெறிக்கும் நீர்திவலையில்  வானவில்லாட  
வள்ளலென பெருகிவரும் ஐந்தருவி !

கைநனைத்துக் கால்நனைத்துத் தலைநனைத்து
உடல்நனைக்க உளம்நனைத்திட ஓடும் !
கடுகெண்ணை நல்லெண்ணெய் தலையூரக் 
களைப்பெல்லாம் நீரினிலே கரைந்தோடும் !

தூதுவளை  வல்லாரை  நெல்லிப்பொடியோடு
தூக்கம்வர நல்லதொரு ஜாதிக்காயும்
தூயமனம்காண  மோனமுடன் யோகத்தையும்   
முதுகலையாய் ஓதிவிடும் யோகியர்கள் !

மேகங்களைத் தலைசுமந்த மோகத்திலே
புவியரசி காதலிலே மலையரசன்  !
வேழங்கள் அசைந்தாடி நடப்பதுபோல்
வேகமின்றி அரவணைக்கும் தென்றல் !

கண்திறந்து பார்த்தோருக்கு காட்சியங்கே 
கயிலைநாதன் கயல்விழியின் திருக்கோலம் !
கண்மூடி மலையருவி முன்னிருந்தால்
காலம்மறந்து ஞாலம்மறக்கும் நல்யோகம் !


No comments:

Post a Comment