Wednesday, December 20, 2017

4. திருவாலி -திருநகரி (அருள்மிகு அழகிய சிங்கர்)




4. திருவாலி -திருநகரி (அருள்மிகு அழகிய சிங்கர்)

கண்களில் கனலும் கைகளில் நகமும்
உள்ளத்தில் சினமும் உறுமிடும் குரலும்
ஒப்பிலா வீரமும் ஒன்றிய சிங்கமாய்
உருவமே எடுத்தாய் அழகிய சிங்கா !

தூண்களைப் பிளந்து தோன்றிய ஒளியே
தானெனும் அகந்தையை அடக்கிய அரியே !
தாயெனும் கருணை நெஞ்சினில் நின்றும்
தருமங்கள் காக்க நெருப்பென வந்தாய் !!

முன்னும் பின்னும் முடிவாய் பிரித்து
முகத்தினில் குருதியால் முடிவுரை எழுதி
மூலவன் அமர்ந்த திசையினை நோக்கி
முப்புரி அமரரும் மோனத்தில் நின்றார் !

சினம்காக்க சினம்காக்கச் சேர்ந்தனர் அமரரும்
சேவடி விடுத்தே சிந்தையை  அணைத்துச்
சேர்ந்தே அமர்ந்தாள் சீர்மிகு செங்கமலத்தாள்
சிதையாத கருணையைச்  சிங்கமே தந்தாயே !

நலம்காக்க நலம்காக்க நானிலமே வேண்டிட
நிலையாத சினம்விட்டு நீலமேகன் அருளிட
நினையாத துயர்கூட நிலம்விட்டு நீங்கிடும்
நினைவெல்லாம் சிங்கனின் சேவடி நின்றிடும் !

வந்திட்ட துயரெல்லாம் வரதனே நீக்கிடுவாய்
வாராத துயரெல்லாம் வருமுன்னே விலக்கிடுவாய்
வந்தனை செய்கின்றேன் வாழ்வெல்லாம் துணையிருக்க
வருவாயே அருள்வாயே  வரலட்சுமி மணாளனே !














No comments:

Post a Comment