Monday, December 25, 2017

மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -9 திரு நாவை - அருள்மிகு நவமுகுந்தப் பெருமாள்


எட்டாமல் அலைகடலில் கிட்டாமல் கிடந்தாலும்
எட்டாம் பிறையில் இருட்டறையில் பிறந்தாலும்
எட்டுமுறை வீழ்ந்தே ஒன்பதாய் நின்றவனே
எண்ணத்தில் நிற்பவனே நாரணனே நவமுகுந்தா!

கருநாக விரிப்பினிலே கண்மூடி அயர்ந்தவனே
கருடனின் மேலமர்ந்து காத்திட விரைபவனே 
கருணையால் கல்லிருந்த அகலிகைக்கு அருளியவனே
கருமத்தால் ஜடாயுவுக்கு விடுதலை அளித்தவனே

அலர்மேல் மங்கையவள் அன்போடு துணையிருக்க
அசையாத விழியோடு  அமரர்கள் பார்த்திருக்க
ஆதிசேடன் குடைபிடிக்க அமர்ந்தாயே அழகாக
அடியார்கள் குறைகேட்க அருளாளா வைகுந்தா

சூதாடும் என்நெஞ்சம் சுற்றியுள்ள பொருள்களோடு
சொந்தமென ஏற்றிருக்கும் சுமைதாங்கி வலியோடு
சோதனைகள் எதிர்கொள்ளும் வந்தவினை விட்டுவிட்டு 
சோகக்கதை மாற்றிவிட்டு சுதர்சனனே காத்துவிடு !

என்னமொழி  சொன்னாலே இதயத்தைத் தொட்டிடலாம்
சொல்லமொழி ஏதுமின்றி சொல்லாமல் தவிக்கின்றேன்
தாய்மொழியில்  கவிதையொன்று கண்ணீரில் குளித்திருக்க
எந்தமொழி இனிவேண்டும் அங்கமொழி அறியாயோ ?

பொன்னங்கி உனக்குடுத்தி பூவாலே அலங்கரிப்பார்
முத்தங்கி உனக்குடுத்தி முக்கனிகள் படைத்திடுவார்
நூலங்கி உனக்குடுத்தி நூதனமாய் பார்த்திருப்பார்
சொல்லங்கி வடித்துடுவேன் சொந்தமென வந்துவிடு !



No comments:

Post a Comment