Friday, December 18, 2015

மார்கழி மணாளன் (1) திருவரங்கம் -ஸ்ரீ ரங்கநாதர்


அரங்கத்தான் திருமேனி துயிலுறங்கத் தான்

அஞ்சுதலை ஆதிசேடன் குடைப் பிடித்தான் !

அன்னை இலக்குமியும் அடி போற்றத்தான்

அரங்கத்தான் தாள் அகிலமெல்லாம் காப்பு. !
 

ஆதவன் சுடரெல்லாம் கார்மேனி கவர்ந்திருக்க

அங்கமெல்லாம் புதுநிலவாய்ப்  பொலிந்திருக்க

அரக்கன்தம்பி ஆள்திசைக்கும்  அருள்கிடைக்க

அலையாழி துயில் செய்யும் அரங்கத்தான் காப்பு !

 

விண்ணவரும் மன்னவரும் கண்விழியில் காத்திருக்க

வேதமுடன் பாசுரங்கள் விண்வெளியில்  ஒலித்திருக்க

விழிகாண ஆவினங்கள் விருப்பமுடன் காத்திருக்க  

விழிமூடி விளையாடும் வைகுந்தன்  அருள்காப்பு !

 

துயிலுறங்கும் தூயவன் நினைவெல்லாம்

துயர்துடைக்கச்  சென்றதுவோ அகிலமெல்லாம்?

தூங்காமல் தூங்குகின்ற தோற்றமுற்றான்

துளசி மாலையணி  துவாரகையான் திருக்காப்பு! !

 

ஆழ்வார்கள் சாசனங்கள் அவன் கேட்டும்

அமர்ந்திடவே  ஆசனங்கள் ஏற்கவில்லை !

காவிரிக் கருணையில் கழனிப்பாசனம் போல்

காதல் கொண்டோருக்குக் கண்ணன் காப்பு !

 

நீலக்கடலிலே நீண்ட சேஷத்திலே

நித்திரை காட்டும் முத்திரை மோனத்திலே

நீர்மேகக் கண்ணனவன்  பாதத்தையே

நினைத்தவருக்கெல்லாம் அருட்காப்பு !

 

 

No comments:

Post a Comment