Monday, November 21, 2016


இலையுதிர் காலம்




 

நேற்றைய சொந்தங்கள் நிலையாய் இல்லை

பற்றிய பந்தங்கள் நினைவில் முல்லை

வந்தது நின்றது வளர்ந்தது வீழ்ந்தது
விந்தை வாழ்வெனும் மாயை கலைந்தது !



பூப்பும் மூப்பும் புலனுள் அடக்கம்

பூவா நினைவுகள் மண்ணில் கிடக்கும்

புரிந்த உயிர்கள் புதிதாய் பிறக்கும்

புரியா நெஞ்சங்கள் பொழுதும் துடிக்கும் !



மதியிட்ட கணக்கை விதியொன்று வென்றது

விழிகண்ட பார்வை  வழியின்றி முடிந்தது

அறிவென நினைத்தது அமைதியில் மறைந்தது

விதியிட்ட பாதையோ வாழ்வெனும் கவிதை ?



வண்ணங்கள் விலகிட வெளிச்சமே உண்மை

எண்ணங்கள் மறைந்தால் எல்லாம் நன்மை

சின்னங்கள் உள்ளே சிறைப்பட்ட வாழ்க்கை

பின்னங்கள் இல்லை பேரருள் கருணை !



உதிர்ந்திடும் இலைகள் உணர்த்திடும் உவமை

சருகாய் வீழ்ந்ததும் சமத்துவம்  உண்மை

உருவாய் இருக்கையில் உதவிடும் நிழல்கள்

உலகுக்கு இலைகள் தருகின்ற பெருமை !








No comments:

Post a Comment