Monday, November 7, 2016

ஆறுபடைவீடு (4)

 க. பாலசுப்பிரமணியன்

திருப்பரங்குன்றம்
thiruparamgunram3
 பரங்குன்றத்துப் பேரழகே ! பார்புகழும் விண்ணழகே !
பரமசிவன் விழியிருந்து பறந்துவந்த ஆணழகே!
பழகுதமிழ் மொழிதந்து  பண்பரப்பும்  தமிழழகே !
பாலோடு தேன்கலந்த பல்சுவைப் பெயரழகே !

நாதத்தின் தலைவன் நினைப்பினிலே பிறந்தாய்
வேதத்தின் பொருளாக வாழ்வினிலே நின்றாய்
ஞானத்தின் வடிவாக ஞாலத்தைக் கவர்ந்தாய்
காலத்தின் கருவே ! கருணைமிகு கந்தா !

பொய்கையில் வளர்ந்த பொதிகைமலைத் தென்றலே
பூமேவும் செங்கமலம் குருபரனுக்குக் கொடுத்தவனே
புரியாத பிரணவத்தை பரமனுக்கும் சொன்னவனே
புதிரான வாழ்வுக்குப்  புதுப்பொருளைக் கொடுப்பவனே !

படியாத அகம்கொண்டு பழிகொண்ட சூரனை
பரிவாக அருள்கொண்டு ஆட்கொண்ட அமரா !
பரிசாக தெய்வானைக் கைப்பிடித்த பண்பாளா !
பரங்குன்றம் புகழ்பாடும் மெய்ஞ்ஞான திருவே

அவ்வையோடு அகத்தியனுக்கும அருள்செய்த ஆனந்தா !
ஆலவாய் தமிழ்ச்சங்கம் அணிசெய்த அமுதா !
ஆயிரம் பெயர்கொண்டு அழைத்தாலும் அசையாமல்
அடியார்கள்  அன்பிற்கு  அருள்செய்யும் வேலவனே !

குன்றுமேல் நீயிருக்கக்  குறைவின்றிப் பார்த்திருந்தேன்
குகையுள்ளே நீஅமர்ந்தால் குமரா என்செய்வேன் ?
குலம்காக்கும் கொழுந்தே நெஞ்சினிலே வருவாயோ?
குறைநீக்கி அறம்காக்கக் குருவாக நிற்பாயோ ?

No comments:

Post a Comment