Sunday, December 25, 2016

மார்கழி மணாளன் (10 )


மார்கழி மணாளன்  (9)

திருப்பார்த்தான்பள்ளி  - அருள்மிகு தாமரையாள் கேள்வன் பெருமாள் 

காவிரியைக் கமண்டலத்தில் கசிவின்றி அடைத்தவன்
கயிலையின் திருமணத்தைப் பொதிகையிலே பார்த்தவன்
கரையில்லா ஆர்வத்துடன் கலைகளெல்லாம் கற்றவன்
கடுந்தவத்தில் தனைமறந்து மகிழ்ந்தான் அகத்தியன்

பார்த்தனுக்கே பருகிடவே நீரின்றிப் பார்த்தவனும்
படைத்தவனை வேண்டிடவே பரிந்துரை செய்திடவே
பங்கயச் செல்வியின் பார்வையுடை கோவிந்தன்
பாண்டவனுக்கு  அருளிடவே பாற்கடலைத் துறந்தான்

போர்முனை எதிரிகள் போல்வரும் உணர்வுகள்
வாள்முனை அச்சத்தில் வளர்ந்திடும் கனவுகள்
தேர்முனை பார்த்தவன் திசையின்றி நின்றிடவே
ஊழ்வினை களைந்திட உத்தமனை அழைத்தானே !

போர்முனையில் அறம்காக்கக்  கீதையைச் சொன்னவன்
விதிமுனையில் மனம்காக்க வாழ்க்கையைச் சொன்னான்
தோள்முனையில் துளிர்த்திட்ட வல்லமைகள் வீழ்கையிலே  
வாழ்முறையில் வளம்காக்க மறைசொன்னான் மாதவனே !

பொருளில்லா வாழ்க்கைக்குப் புவியில் இடமேது
பொருள்மட்டும் தேடுகின்ற மனத்திற்குப் புகலேது
புகலொன்றே பார்த்தா பொற்பாதம்! இணையேது
புரிந்தாலே மன்னுயிர்க்கு மண்ணுலகில் முடிவேது  ?

விண்ணெல்லாம் அலைந்தாலும் விடையறியா அமரர்கள்
மண்ணெல்லாம் அலைந்தாலும்  மனதறியா மாந்தர்கள்
கண்ணெல்லாம் ஒளியாக்கிக்  கல்லுள்ளே பார்த்தாலும்
தன்னுள்ளே வைத்திருந்தால்  தவறாது வந்திடுவேன் ~”

  

மார்கழி மணாளன்  (10 )
திருப்படகம் - அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் கோயில்


அறத்தினைக் காத்திட அமைதியை நாட்டிட
அரியணை தர்மத்தை அனைவரும் உணர்ந்திட
அமரர்கள் போற்றிடும் அச்சுதா அனந்தா
அரசவை நின்றாய் தூதனாய் மாதவா !

தூதுவன் போற்றிடத் தவறிய துரியனும்
மாதவன் உன்னை மண்ணினில் வீழ்த்திட
மாயங்கள் நினைத்ததும் மனத்திலே வீழ்ந்தான்
மாயைகள் படைத்த மாலனே மடிவதோ ?

ஆடையை உருவிய அரக்கர்கள் நடுவில் 
ஆணவம் பெருக்கிய அவையினர் முன்னில்
புண்ணுடை  கண்ணிரு  அரசனின் விழிகளில்
விண்ணுயர்  வள்ளலாய் மண்ணிலே நின்றாய்!

பொன்னிரு தாள்களை பூமியே போற்றிட
விண்ணுறை கோள்களே விழிகளைப்  போற்றிட
மண்ணுறை உயிரெல்லாம் மார்பினைப் போற்றிட
வானுறை அமரர்கள் வாழ்த்திய வேங்கடா !

ஐம்பொறி ஆள்கின்றாய் அரவணை அயர்ந்தே
ஐம்புலன் ஆள்கின்ற அரங்கனே அமரனே 
ஐவரின் நண்பனே ! அமைதியின் தூதனே !
ஐயங்கள் நீங்கிய மனதினை அருள்வாய் !

அச்சங்கள் ஏதுமில்லை அச்சுதன் துணையிலே
உச்சங்கள் தொடலாம் ஒப்பிலி அருளினால்
பச்சைநிற மேனியன் பார்வையில்  இருந்தால்
இச்சைகள் நீங்கியே  இசைத்திடும் வாழ்வே !

No comments:

Post a Comment