நானும் சங்கரன் தான்..
சிறுகதை .. க. பாலசுப்ரமணியன்
"மகாலிங்கம் .. மகாலிங்கம்..."
அந்த திருவிடைமருதூர் கோவில்
பிரகாரம் முழுதும் அந்த ஒலி எதிரொலித்தது.
காலை ஐந்தரை மணிக்கு அந்தக்
குளத்திலே நீராடி
விட்டு, குளிர் காற்று அந்த
சில்லென்ற உடம்பைத்
தழுவ, திருநீறின் மணம் பக்தி பரவசத்தை
உண்டாக்க அந்தக் கோவில் பிரகாரத்தை
சுற்றி வருவது மனதுக்கு இனம்
புரியாத மகிழ்ச்சியை த் தந்தது.
.
மீண்டும் யாரோ அங்கே "மகாலிங்கம்,
மகாலிங்கம்" என்று குரல் எழுப்பியதும்
என் சுயனைவுக்குத் திரும்பினேன்.
" இந்தக் கோவில் ரொம்ப
பெரிசு. இங்க வந்து தரிசனம்
பண்ணினா " பிரம்மஹத்தி தோஷம்" விலகிடுமாம். நிறையப் பேர் சொல்லுவா."
முன்னாலே போன பெரியவர் நான்
இந்தக் கோவிலுக்கு முதல் முறையாக வருவதைப்
புரிந்து கொண்டார் போலும்..,
பிரம்மஹத்தி தோஷம்னா என்ன?
என் மனதில் ஒரு கேள்வி.
சான்றோரைக் கொன்றதாலா, இல்லை, கர்பிணிப் பெண்களைக்
கொன்றதாலா, இல்லை முதியோரையோக்
கொன்றதாலா .. சந்தேகத்திற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
'"ஓம் நமச்சிவாய, ஓம்
நமச்சிவாய" என்று
சொல்லிக்கொண்டே முன் நகர்ந்தேன்.
" காலையிலே நீங்கள் தான் முதல்
தரிசனம். விஸ்வரூப தரிசனம் மாதிரி.. பசிக்கறது..
ஏதாவது கொடுங்கோ.."
ஒரு நாலு முழம்
வேட்டியைக் கட்டிக்கொண்டு இடுப்பில் ஒரு துண்டை இருக்கிகொண்டு
திருநீறு அணிந்து முன்னே நின்ற உருவத்தைப்
பார்த்ததும் பகீரென்றது.! இவரை எங்கேயோ பார்த்திருக்கேனே..
மனம் ஆழ்ந்த சிந்தனயில் ஈடுபட்டது..
" சார்,உங்களைத்தானே
ஹெல்ப் பண்ணுங்கோ.."
" இந்தக் குரலும் சற்று
பழகிய குரலாகத் தெரிகிறதே.."
" ..நீங்க. "... கொஞ்சம் தயங்கிக் கேட்டேன்
"அனந்து சார் இல்லே"
" அனந்து .. அனந்தன்.. ஆனந்தன்.. ஆனந்தம் எல்லாம்
என் பெயர் தான். கோவிலுக்கு
உள்ளே இருக்கானே, அவனுக்கும் இந்தப் பெயரெல்லாம்
உண்டு., ..பசிக்கிறது.. ஏதாவது குடுங்கோ.."
"நீங்க நாகர்கோயில் கணபதி
கோயில் தெருவிலே இருந்தேளோ?"
"பிள்ளையார்.. எல்லாக் கஷ்டத்தையும் நிவர்த்தி
செய்வார். நோ டவுட். எதாவது
தருவேளா.."
மனம் வலித்தது.. இவருக்கு
எதாவது மன நோயோ? ஏன்
இங்கே வந்து பிச்சை கேட்டுக்கொண்டு
இருக்கிறார்? இவர்
குடும்பம் முழுவதும் எனக்குத் தெரியுமே.."
"சார், உங்கள் குழந்தைகளெல்லாம்..?"
"குழந்தைகளா?....." ஏதோ பெரிய ஜோக்
சொல்லிவிட்டதைப் போல் சிரித்தார்... " சின்ன வயசிலேதான்
அவர்கள் குழந்தைகள்... அதுக்கப்பறம் படிச்சு வேலைக்குப் போயாச்சுனா
அவா எல்லாம் ஆபீசர்கள் .. என்
வாரிசுகளெல்லாம் பெரிய ஆபீசர்கள். ..."
அவர் சூசகமாகச சொன்னதிலிருந்து
அவர் வாழ்வின் உண்மை தெரிய வந்தது..
"'ஜெர்மனி தெரியுமா, ஜெர்மனி
அங்கதான் என் ஆபீசர் மகன்.
.." அந்த வார்த்தைகளில் தொனித்தது பெருமையா ஏளனமா என்று தெரியவில்லை.
" உங்க மனைவி... ? "
மீண்டும் வாய் விட்டுச் சிரிப்பு..
பெண்டாட்டி ரொம்பப் படுத்தினா,
அவ்வை என்ன சொன்னா தெரியுமா
"கூறாமல் சன்யாசம் கொள்" .. சொல்லிவிட்டு
மீண்டும் ஒரு சிரிப்பு..
" நீங்க ஒரு கம்பெனியிலே
மக்கள் தொடர்பு அதிகாரியாக
இருந்தேளில்லையோ .."
"அன்னிக்கும் மக்கள் தொடர்பு .. இன்னிக்கும்
மக்கள் தொடர்பு.. அன்னிக்கு நான் பேசினதுக்கு காசு
கொடுத்தா .. இன்னிக்கு நான் பேசாம இருக்கறதுக்கு
காசு கொடுக்கறா.. நீங்க எப்படி? பசிக்கறது.. ஏதாவது தருவேளா..."
வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சியது போன்ற ஒரு அனுபவம்.
,." நிச்சயமா தரேன்.. ஆனா ஒரு
கேள்வி.. உங்களுக்கு அந்த தெருவிலே ஒரு
வீடு இருந்ததில்லையோ? "
"வீடு.. அந்த வீடு
வேற.. நான் இனிமே போகப்போற
வீடு வேற.. அந்த வீட்டை
விலைக்கு விக்கலாம்.. எல்லாரும் ஷேர் பண்ணிக்கலாம் .. இந்த
வீட்டுக்கு விலையே கிடையாது.. யாரும்
ஷேர் பண்ணிக்கவும் மாட்டா .."
"வீடு வரை உறவு..:
கண்ணதாசன் பாடல் கேட்டிருக்கேளோ? அதெல்லாம்
கேட்ட பின்னும் ஜனங்களுக்கு
புத்தி வர மாட்டேங்கறது... சரிதானே?
"மகாலிங்கம் மகாலிங்கம்"
.. கோவில் முழுதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது .. அந்த சிவன் அங்கே
அமர்ந்து கொண்டு ஏன் இப்படி
நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று
புரியவில்லை.
"ஹலோ .." அவர் குரல் மீண்டும்
என்னை ஈர்த்தது. ."உங்களுக்கு ஆதி சங்கரரைத் தெரியுமோ...?:
நான் தலையை அசைத்தேன்
.. "அவர் எங்கே பிறந்தார்?"
ஏதோ விநாடி வினாவில் கேள்விகள்
கேட்பது போல் கேட்டார்.
:"காலடி" மெதுவாகச் சொன்னேன்.. "கரெக்ட். அவர்
எப்படி சாப்பிட்டார் தெரியுமா?"
நான் மௌனமாக இருந்தேன்.
அவர் தொடர்ந்தார்.
" பவதி பிக்ஷான் தேஹி."..
தினசரி வீடு வீடாகப் போய் "பவதி
பிக்ஷான் தேஹி" என்று
பிக்ஷாவந்தனம் செய்து
தானியங்கள் பெற்று உணவு சமைத்து
சாப்பிட்டார்.
எதோ ஒரு பெரிய
உண்மையை கண்டறிந்தது போல் நான் பேசாமல் இருந்தேன்.
" இப்போ நானும் "பவதி
பிக்ஷான் தேஹி" வீடு
வீடாகப் போகலை. இங்கேயே இப்படியே
கோவில் வாசலிலே நின்று கொண்டு
:பவதி பிக்ஷான் தேஹி.,"
":சொல்லுங்கோ.. எனக்கும் சங்கரனுக்கும் என்ன வித்யாசம்? நானும்
சங்கரன் தானே.." சிரித்துக்கொண்டே "அவர்
ஆதி சங்கரர்.. நான் ஆதி அனந்தர்.."..
ஓ வெனக் கைகொட்டிச்
சிரித்தார்.
மெதுவாக அவர் கைகளைப்
பிடுத்து அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்றேன். அவருக்கு வேண்டிய காலை டிபன் கொடுக்கச் சொன்னேன்..
அவர் கைகளில் ஒரு நூறு
ரூபாய் நோட்டைத் திணித்தேன்.
அவரைப் பார்த்த அந்த
ஹோட்டல் முதலாளி "யாரு? பவதி பிக்ஷான்
தேஹி சாரா?" புன்னகை அவர் முகத்தில்.
அருகில் இருந்த சிவபிரானின்
படத்தை ஒருமுறை பார்த்து "மகாலிங்கம்"
என்றார்.
கடைசியாக அவரிடம் நான் "சார்,
நான் யார் என்று தெரிகிறதா?"
எனக்கேட்டேன்.
என்னை ஒருமுறை தீர்க்கமாகப்
பார்த்துவிட்டு "ஆதி
அனந்தருக்கு இன்னிக்கு பிக்ஷா வந்தனம் செய்த
ஒரு நல்லவர்.. ராஜாராமன் என்ற நாமதேயம்." இட்டிலியை
சாம்பாரில் தோய்த்து வாய்க்குள் திணித்தார்
என் சப்த நாடிகளும்
அடங்கி நின்றன!!
No comments:
Post a Comment